இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
பிச்சையெடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் , இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
- திருக்குறள்.
அழிஞ்சில் மரம் |
மேலும் அழிஞ்சில் படங்கள்
பார்க்க அழகாகவும், மனதைக் கவரும் வண்ணத்தில் அழகான பழங்களையும் கொண்ட நெடு மரமாகவும் வளரக் கூடிய மரமாயிருக்கிறது. இம்மரம் அழிந்து வருவதாலேயே இதை அழிஞ்சில் எனப் பெயரிட்டனரோ? தற்சமயம் கிராமங்களில் கூட காணப்படுவதில்லை, சில கோவில்களில் தல மரமாக தென்படுகின்றன. இந்தியா, பர்மா போன்ற வெப்ப மண்டல காடுகளில் காணப்படும்.
இதன் பயனுள்ள பாகங்கள் விதை மற்றும் பட்டை. இதன் சுவை கைப்பு, இதன் வீரியம் வெப்பம். விதையின் குணம் வாதகோபம், பித்த தோடம், சீழ் வடியும் பெருநோய் முதலிய பிணிகளைப் போக்கும்.
வேர்ப்பட்டை
இதன் வேர்ப்பட்டை, கால் அல்லது அரை பலம் எடுத்து (1 பலம் என்பது 35 கிராம் ) எட்டு குவளை தண்ணீரில் போட்டு ஒரு குவளையாகக் குறுக்கி சிறிது நெய் சேர்த்து 42 மிலி முதல் 84 மிலி வரை அருந்த அல்லது வேர்ப்பட்டையை தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைத்து வடித்து மேற்சொன்ன அளவுப்படி அருந்த , நாட்பட்ட கடிவிடம், பாம்புக்கடி விடம், விடக்கடியினாலுண்டான சிவந்த வலியுட்ன் உண்டான வீக்கம் நீங்கும். பெருங்குடலில் தங்கிய புழுக்கள் வெளியாகும்.
8,75 கிராம் முதல் 17 கிராம் வரை வேர்ப்பட்டையை எடுத்து , இயற்கை அரிசி கழுவிய தண்ணீரில் அரைத்துச் சிறிது தேன் கலந்து கொடுக்க , செரியா கழிச்சல் ( அசீரண பேதி ) தீரும்.
குட்டம் முதலிய தோல் வியாதிகளிலும், மேகப் புண்களிலும், வழக்கமான காய்ச்சலிலும் அழிஞ்சில் பட்டையை அளவுப்படுத்தி சுத்தநீர் விட்டரைத்து உள்ளுக்குக் கொடுக்க நற்பலன் கண்டதுண்டு.காய்ச்சல் தவிர மற்ற வியாதிகளுக்கு உப்பிலா மோர் அல்லது பாலில் உணவு உண்ண வேண்டும்.
வேர்ப்பட்டையைக் குழித்தைலம் இறக்கி , மூட்டுகளில் காணப்படும் சவ்வு வறட்சியினால் உண்டாகும் கீழ்வாத நோய் தணியும்.
இப்பட்டையை நன்றாகப் பொடித்து , துணியிலூட்டி (வஸ்திரகாயம் செய்து ) மேகப்புண்கள், சீழ் வடிகின்ற குட்டம், சொறி சிரங்கு இவைகளின் மேல் தூவ குணமாகும்.
இப்பட்டைக்கு 42 வகை மாந்தங்கள், ( loss of appetite) , காய்ச்சல், சந்நி போம் என்பது தந்வந்திரி கருத்து (வைத்திய குரு நூல் - 200 ).
சன்னி - இதனால் அறிவழிதல், கண்ணொளி மயங்கடல், மூர்ச்சை, உடல் சில்லிடல், வலிப்பு , வாயில் நுரை தள்ளல், பற்கிட்டல், விழுங்க முடியாமை, சிறுநீர் விடல், நாடி தளரல், வாய் கோணல் முதலிய குறி குணங்கள் தோன்றும்.
அழிஞ்சில் வித்து
அழிஞ்சில் பட்டை பித்தத்தை உயர்த்துமெனினும், நேர்மாறாய் இதன் வித்து இரத்த பித்த நோய் (நவ துவாரங்களிலும் இரத்தம் வரும் நோய்) ,இரத்த வாந்தி , பித்த எரிச்சல், இவைகளைப் போக்கும்.
மேற் சொன்ன நோய்களுக்கு அழிஞ்சில் மரத்தின் வித்தின் பருப்பு 1 கிராம் முதல் 2 கிராம் வரை , பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலில் கலந்து , கொஞ்சம் சீனி கூட்டி உபயோகிக்கலாம்.
இத வித்திலிருந்து தயிலமிறக்கி மறைப்பு மையாக உபயோகிக்கிறார்கள். இதனை
தொழுஞ்சகமோ கக்கரப்பிற் சொல்அஞ் சனமாம்
அழிஞ்சில் விதையென் றறி
எனும் பாடலால் அறியலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி