பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்யாதேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ் செய்யாதிரு மனமே
சொல்லறுஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசுவாசம் - எந்த
நாளும் மனிதற்கு நன்மையாய் நேசம். 2.
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி 4.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே 7.
காசிக்கோ டில்வினைபோமோ ?- அந்தக்
கங்கை யாடில்கதி தானுமுண்டாமோ
பேசுமுன் கன்மங்கள் சாமோ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ? 15.
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே
மைவிழி மாதரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே 24.
வைதோரைக் கூட வையாதே - இந்த
வையம் முழுதும் பொய்த்தும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே 25.
பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட் டாதே
வேம்பினை யுலகிலூ ட்டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே 27.
போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே 29.
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி நூல்படி யாதே 30.
எவ்வகை யாகநன் நீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி 33.
கள்ளவே டம்புனை யாதே - பல
கங்கையி லேயுன் கடம் நனையாதே
கொள்ளைகொள் ளநினையாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே 34.
(கடம் - பாவம்)
-சித்தம்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி