வணக்கம் நண்பர்களே !
அரிதாக , மருந்தையோ அல்லது மருந்து மூலப் பொருட்களையோ சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாகவோ, உபயோகிக்கும் குறித்த காலம் தாண்டியோ அல்லது பாதுகாக்கும் போது பிசகினால் அதன் தன்மை மாறிய மருந்தை அருந்தியதால் வயிற்று வலி, பேதி, சிறு மயக்கம், வயிற்றில் புண் உண்டாதல், பேதியாதல், மலம் கடுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம், இதனை வீறு என்பர்.
வீறு முறிக்கும் முறைகளைக் காணபோம்.
1. அனைத்து வித பாசாணங்களுக்கும் முறிப்பு
நீலி என்னும் அவுரிச் செடியின் இலை, மிளகு இவைகளை ஓரளவாய் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு புது மட்கலத்தில் எட்டு சிறுகுவளை சுத்தமான நீர்விட்டு கொதிக்க வைத்து எட்டில் ஒன்றாய் குறுக்கி ஆறவிட்டு பிணியாளர்க்கு குடுக்கவும். இவ்வாறே ஆறு வேளை புதிது புதிதாய் தயாரித்து ஆறு வேளை கொடுக்க இரண்டே நாளில் வீறு தணியும்,
அவுரிச் செடி |
பற்ப, செந்தூரங்களின் வீறு முறிக்க மருந்து
1) ஒரு புது மட்கலத்தில் , அருகங்கட்டை என்னும் அருகம்புல்லின் வேர் 35 கிராம் , மிளகு எண்ணிக்கை 50 இவைகளை சிதைத்துப் போட்டு அந்த மட்கலத்தில் மூன்று லிட்டர் நீர் ஊற்றி அடுப்பேற்றி சிறு தீயாய் கொதிக்க வைத்து 750 மி,லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அந்தக் கியாழத்தில், மாதுளம் மரப் பூ 35 கிராம், சுத்தி செய்த அதிமதுரம் 35 கிராம், காட்டெருமைப்பால் எனப்படும் கூகைநீறுக் கிழங்கு 35 கிராம் இம் மூன்றையும் பொடித்து , கியாழத்தில் போட்டு நெல்லிக்காய் அளவு பசுவெண்ணெய் போட்டு காலை வேளையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் குடுக்க செந்தூர பற்பங்களின் வீறு தணியும்,
2) நாட்டுப் பருத்தியின் காய்ச் சாறு 50 மி,லி, எலுமிச்சம்பழச்சாறு 50 மி,லி, நாட்டுப் பசும் பால் 50 மி,லி இதனுடன் வெள்ளைச் சர்க்கரை 30 கிராம் கலந்து , வெறும் வயிற்றில் மூன்று நாள் கொடுக்க வீறு தணியும்.
வீறினால் உண்டான பேதி, வயிற்றுக் கடுப்பு, இரத்தக் கடுப்புக்கு மருந்து
ஆவாரஞ் செடியின்வேர்த் தோல் 35 கிராம் , முருங்கை இலை ஈர்க்கு 70 கிராம் , நாட்டுச் சின்ன வெங்காயம் எண்ணிக்கை 10 இவைகளை ஒன்றிரண்டாகத் தட்டி ஒரு புது மட்கலத்தில் போட்டு அதில் 2 லிட்டர் நீர் ஊற்றி சிறுதீயாய் கொதிக்க வைத்து 250 மி,லியாகச் சுண்டச் செய்து வடிகட்டி கொள்ளவும்,
மேற் சொன்ன கியாழத்தை காலை மாலை இருவேளையும் ஐந்து நாட்கள் குடிக்கச் செய்ய வயிற்று கடுப்புகள், பேதி நிற்கும்,
ரசவீறு தணிய மருந்து
சுரைக் காய் |
சுரைக் குடுக்கை |
சுரைக் கொடியின் காயை பதப்படுத்தி காய வைக்கப்பட்டது சுரைக் குடுக்கை எனப்படும். அந்த சுரைக்குடுக்கையை சுட்டு கருக்கி, அந்தக் கரியை நன்றாகப் புளித்த மோரில் கலந்து கரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடுக்க ரசம் என்னும் பாசாணத்தின் வீறு தணியும். மருந்தின் நற் குணங்கள் மட்டும் கிடைக்கும்.
பாடாணம் விடமித்ததற்கு மருந்து
பசலிக்கீரை, கோவை இலை, பொன்னாங்காணி இலை, சிறுகீரை இலை, ஆமணக்கு இலை, எலுமிச்சை இலை, அவுரி இலை , துளசி இலை, பாகல் இலை இவைகளின் வகைக் ஒரு கைப்பிடி இலை எடுத்து ஒரு புது மட்கலத்தில் போட்டு 35 கிராம் மிளகையும் போட்டு இரண்டு லிட்டர் நீர் ஊற்றி , அடுப்பேற்றி சிறுதீயாய் எரித்து 250மி,லி அளவாகக் குறுக்கி வடிகட்டி குடிக்கச் செய்ய பாடாணவீறு தணியும்,
நாவி விடமித்ததற்கு முறிப்பு
சிறுகீரை இலையை கியாழம் (கஷாயம்) செய்து சாப்பிட்டு வர நாபிக் கிழங்கின் வீறு தணியும்,
சுண்ணாம்பு
வெற்றிலை பாக்கு அருந்தும்போது சுண்ணம்பு அதிகமானதால் உண்டான வாய் வெந்து போவதற்கு மஞ்சள் கிழங்கு முறிப்பாகும்.
சிவதை வேர்
சிவதைவேரால் செய்யப்பட்ட மருந்தின் வீறாக அதிக வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுவலி கண்டால் வெள்ளை வேலாம் பட்டையை புறணியை செதுக்கி நீக்கி சதையை பஞ்சுபோல் இடித்து ஒரு புது மட்கலத்தில் போட்டு 2லி நீர் விட்டு , அடுப்பேற்றி சிறு தீயாய் எரித்து, 250 மி.லி அளவாகக் குறுக்கி, வடிகட்டி சாப்பிட வீறு தணியும்.
கொடிக்கள்ளி
கொடிக்கள்ளி வேரின் வீறு தணிய , ஆவாரை வேரினை கழுவி ஈரமின்றி துடைத்து அதனை சிறு துண்டுகளாக வெட்டி 2 லி தண்ணரில் போட்டு 250 மி.லியாக குறுக்கி வடித்து குடிக்கச் செய்ய வீறு தணியும்.
ஊமத்தைக்கு முறிப்பு தாமரைக் கிழங்கை கியாழம் செய்து குடுக்கவும்.
எட்டி விதை வீறு முறிப்பு
அலரிக்கு ( அரளி) சுத்தி செய்த கடுக்காயை விதை எடுத்துவிட்டு பொடித்து கியாழம் (கஷாயம்) செய்து குடுக்க வீறு தணியும்.
அபினுக்கு முறிப்பு நெய் அதிகமாய் சேர்த்துக் கொள்ளுதலாகும்.
எருக்கம் பாலுக்கு முறிப்பு கருவேலம்பட்டையின் வெளிப்புறணியினை நீக்கி பசும் மோர்விட்டு அரைத்து மோர் கலந்து கலந்து குடுக்க வீறு தணியும்.
சமுதை வண்டு (செம்மூதாய் வண்டு ? ) மூதாய் என்றால் தம்பலப் பூச்சி என்னும் பட்டுப் பூச்சி (மேலும் ஆய்வு தேவை ) . இதன் வீறு முறிவுக்கு சங்கம் பழத்தின் சதையை அரைத்து வடிகட்டி குடிக்கக் குடுக்க வீறு தணியும்.
சங்கம் பழம் |
குன்றிமணி
வெண்குன்றி |
நல்லெண்ணெயுடன் அரைத்த வெற்றிலையைக் கலந்து குடித்தவர்களுக்கு தேங்காய்ப் பாலைக் குடிக்கக் குடுக்க வீறு தணியும் .
தில்லம்பால் (திள்ளம் பால்)
தில்லம் விரை , ஆட்கொள்ளி விரை எனப்படும். எனவே அதன் குணாதிசியம் தில்லை மரத்தின் பாலிலும் காணப்படும். தில்லை மரத்தின் பால் உடல் மீது பட்டால் புண் உண்டாகும்.
தில்லம் பாலின் வீறு நஞ்சை, கொட்டைக் கரந்தைச் சாறு முறிக்கும்.
சேங்கொட்டை வீறு தணிய
அரக்கி மரம் என்றும் வல்லாதகி மரம் என்றும் அழைக்கப்படும் சேங்கொட்டை மரம். சேங்கொட்டை மரத்தின் விதையின் பால் உடம்பில் பட்டாலோ அல்லது மருந்து செய்யும்போது அதன் புகை பட்டாலோ வீக்கம் உண்டாகும்.
1. சேங்கொட்டை வீறுக்கு பூவரசம்பட்டையினை இடித்து சாறு எடுத்துக் கொடுக்க தீரும்.
2. புளிய இலையை இடித்து எடுத்தச் சாறு அல்லது நல்லெண்ணெயில் பழம் புளியைக் கரைத்து அந்த சாறு குடிக்கச் செய்து பின்பு தான்றிக்காயையும் , புளித்த மோரையும் அரைத்து உடம்பில் பூச வீறு தணியும்.
வீரம், ரசபத்து இவைகளுக்கு முறிவு.
12 எண்ணிக்கை நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் அதே அளவு தணணீர் கலந்து சிறிது சிறிதாக குடிக்க குடுத்துக் கொண்டிருக்க அதன் விஷத்தன்மை முறியும்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி