சித்தர் பாடல் 1
இண்டிகை மிளகொடு யிசங்கு தூதளை கண்டுநற் சர்க்கரை கலந்து காய்ந்த நீர்
உண்டிடி
லொருவர்க் கீளை வந்திடில்
தெண்டமு மிருத்துனான் தேரனு மல்லவே.
|
இண்டு
|
மறைமொழிகள் (பரிபாசை)
இண்டிகை - இண்டங்கொடி . புலித்தொடக்கி,ஈயக்கொடி. இண்டை. ஈக்கை கொடி ///
மிளகொடு -மிளகுடன் ///
இசங்கு - சங்கஞ் செடி ///
தூதளை - தூதுவளை. முள்ளுகொடிச்சி. நயனசஞ்சவி.
சுபநாசினி. அருளகக்கொடி///
கண்டு - கண்டங்கத்திரிச் செடி///
|
தூதுவேளை |
பொருள் விளக்கம்
இண்டங்கொடி இலை. மிளகு. முட்சங்கன் இலை. தூதுவளை இலை. கண்டங்கத்திரி காய் இவைகளை (நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்தலாம்) சர்க்கரையுடன் முறைப்படி குடிநீர் (கஸாயம் ) செய்து அருந்திட ஈளை என்னும் இருமல் நோய் தெண்டனிட்டு ஓடவில்லையெனில் நான்
வைத்தியனே இல்லை.
|
கண்டங்கத்திரி |
|
முட்சங்கன் இலை |
மருந்துப் பொருட்களின் குணம்
இண்டு - பீனிசம், தலையில் நீரேற்றம். தலையில் குடைச்சல் வலி. முக சன்னி குணமாகும்,
மிளகு - ஐய சுரம். சன்னி. கபம். காது வலி. . இருமல் மற்ற பிற நோய்களும் தீரும்,
சங்கஞ்செடி - இதன் இலை வீக்கம். சூலை வாயு, பித்தம். கிரந்தி இருமல் நீங்கும்
தூதுவேளை - விந்து நட்டம். சூலை. காது மந்தம். காதில் தோன்றும் எழுச்சி. இருமல் முதலிய பிணிகள் நீஙகும்.
கண்டங்கத்திரி - அனல் வீசும் காய்ச்சல், சன்னி. இருமல், இளைப்பு, செரிமான மந்தம் முதலிய பிணிகள் நீங்கும்.
சித்தம்.
சித்தர் பாடல் - 2
உப்பிலியு மோரு முகந்தவிடத் தோலிலையுஞ்
செப்பமாம் முசுமுசுக்கை சீர்கொற்றான்
சொற்பெரிய கோவினுடை பாலிற் குடிக்க
உளமாந்தை நோவுமீளை யிருமல் விடும்
நெல்லி சற்கரை நெற்பொறி திப்பிலி
நல்ல தேனில் நறுநெய்யில் கொள்வீரால்
இல்லை யில்லை யிருமலு மீளையும்
சொல் வேணுமோ சோகையுந் தீருமே,
மறைமொழிகள்
உப்பிலி - இண்டு . ஈங்கை , புலித்தொடக்கி
ஓரும் - ஆராய / அசைச்சொல்
உகந்த - விரும்பத்தக்க
விடத்தோலிலையுஞ் - விடத்தேர் மரத்தின் தோலும் (பட்டை) , இலையும்
செப்பமாம் - பாதுகாக்கும்
முசுமுசுக்கை - இரு குரங்கின் கை, குரங்கிலை, சுணைக்கொடி, நரியுடை
சீர் - சிறப்பான
கொற்றான் - முடக்கொத்தான்
சொற்பெரிய கோவினுடைய பாலிற் குடிக்க - பசுவின் பாலில் குடிக்க
உளைமாந்தை - உளை மாந்தை எனும் நோயின் தன்மை,
உடல் கனத்து குத்திக் குடைந்து வலிக்கும்
கைகால் எரிச்சல்
காய்ச்சல்
தலைவலி .இருமல், மயக்கத்தில் புலம்புதல்
நினைவு தடுமாற்றம்
வாயால் வெள்ளை நிற நுரை தள்ளுதல் , வாய் நீர் வடிதல்
உணவு வெறுப்பு. உடல் மெலியும்.
பொருள்
இண்டு இலையும். விடத்தேர் இலை மற்றும் பட்டை, முசுமுசுக்கை , முடக்கத்தான் ஆகியவற்றை எடுத்து அரைத்து சாறு எடுத்து பசும் பாலில் கலந்து குடிக்க உளைமாந்தை, ஈளை, இருமல் முதலிய பிணிகள் நீங்கும்.
அனுபானம் எனப்படும் துணை மருந்துகளுடன் கொள்ள ஈளை, இருமலுடன், சோகையும் நீங்கும், துணை மருந்துகளாவன
நெல்லி, சர்க்கரை, நெற்பொரி, திப்பிலி, தேன், நெய்,
|
முடக்கத்தான் கொடி |
|
விடத்தேர் மரம்
|
|
முசுமுசுக்கைக் கொடி |
சித்தம்.
மேலும் சில இருமல் மற்றும் ஈளைக்கான மருந்துகள் அதற்கான பொழிப்புரை சில நாட்கள் கழித்து வெளியிடப்படும்,
த.வை.அ
MGOS Vol II
குணபாடம்
த.லெக்சிகன்